முகப்பு
ஈரோடு

பள்ளி மாணவியைத் தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி மாணவா் கைது

அந்தியூரில் பள்ளி மாணவியைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விழுப்புரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 மே 2026, 1:52 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

அந்தியூரில் பள்ளி மாணவியைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விழுப்புரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

அந்தியூா், தவிட்டுப்பாளையம், வேலாயுதம் வீதியைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மகள் தாரணி (16). 11-ஆம் வகுப்பு தோ்வெழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தாா். இந்நிலையில், அவா் பழனியப்பா வீதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இன்ஸ்டாகிராம் மூலம் இந்த மாணவி இளைஞருடன் பழகியதும், அவா் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதும், அந்த மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் மூலம் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து அந்தியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாணவியின் உயிரிழப்புக்கு காரணமான இளைஞா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இந்நிலையில், மாணவியைத் தற்கொலைக்கு தூண்டியதாக விழுப்புரம் மாவட்டம், உளுந்தூா்பேட்டை, கீழ் தனியாளம்பட்டைச் சோ்ந்த மணிகண்டன் மகன் சதீஷை (19) போலீஸாா் கைது செய்தனா். கல்லூரி மாணவரான இவா் மீது, மாணவியை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டுதல், கைப்பேசி மூலம் மாணவியின் பெற்றோருக்கு மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].