குன்னூரில் தண்ணீர்த் தட்டுப்பாடு மீண்டும் தலையெடுத்துள்ளதால், அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
குன்னூரின் முக்கிய குடிநீராதாரமான ரேலியா அணையின் மொத்த கொள்ளளவான 46.3 அடி உயரத்தில், தற்போது, 20 அடிக்கும் குறைவாக தண்ணீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து நாள்தோறும் 7 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இத்துடன், வண்ணாரபேட்டை, புரூக்லேண்ட், அட்டடி, ஜிம்கானா உள்பட பல்வேறு நீராதாரங்களில் இருந்து 30 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் தண்ணீர் 30 வார்டுகளுக்கும் விநியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பருவமழை பொய்த்ததால், மழையின் தாக்கம் வெகுவாக குறைந்து, குன்னூர் பகுதிகள் கடும் வறட்சிக்கு உள்ளாகி உள்ளன. மேலும், நீராதாரங்களில் இருந்து முறையாக தண்ணீர் விநியோகிக்கப்பப்படுதில்லை எனப் புகார் எழுந்துள்ளது. மவுன்ட் பிளசன்ட் பகுதியில் 28 நாள்களாகியும் தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. மாடல் ஹவுஸ் பகுதிக்கு 17 நாள்களாகியும் தண்ணீர் வராததால் மக்கள் விரக்தியில் உள்ளனர். விலைக்குத் தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ. 750 முதல் ரூ. 1000 வரை விற்பகப்படுகிறது.
இது குறித்து குன்னூர் மக்கள் கூறியதாவது:
ஓட்டுப்பட்டறை, முத்தலாம்மன் பேட்டை, சந்திரா காலனி உள்ளிட்ட இடங்களில் உள்ள கிணறுகள் தூர்வாரப்படாமல் பாழடைந்து கிடக்கின்றன. இக்கிணறுகளை தூர்வாரி, செப்பனிட்டு மோட்டார் மூலம் அந்தந்தப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.பி. தெரு பகுதியில், நகராட்சியால் அமைக்கப்பட்ட கிணறு மூலம் சுற்றுப்புறப் பகுதி மக்களுக்களுக்குத் தண்ணீர் தொடர்ந்து வழங்கி வருவதால், தண்ணீர் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைத்துள்ளது. பிற பகுதிகளில் உள்ள நீராதாரங்களில் இருந்து தண்ணீரைத் தேக்கி வைக்க தடுப்பணைகள் அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எமரால்டு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.