உதகையின் பிரசித்தி பெற்ற மலர்த்திருவிழாவான உதகை மலர்க்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
121-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த மலர்க்காட்சியை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையிலும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையிலும், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்கிறார்.
இந்த மலர்க்காட்சிக்காக பூங்காவின் முகப்பில் 1 லட்சத்து 20 ஆயிரம் காரனேஷன் மலர்களைக் கொண்டு மகாபலிபுரம் கடற்கரை கோயில் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆயிரக்கணக்கான மலர்களைக் கொண்டு ஹார்ன்பில் பறவையின் உருவமும் உருவாக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் உள்ள காட்சி மாடத்தில் ஆஸ்டர், லில்லியம், கேலண்டூலா, பெட்டூனியா, பிளாக்ஸ், சால்வியா, காரனேஷன், கிரசாந்திமம், பிகோனியா, ஆசியாடிக் லில்லி, கேண்டீப்ட் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலர் ரகங்களைக் கொண்டு 15,000 மலர்த் தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, பூங்கா முழுவதும் மலர்களால் ஆங்காங்கே சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர நடப்பு ஆண்டில் 60 ரகங்களில் பல வண்ண டேலியா மலர்களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பூங்காவில் தனியார் மற்றும் அரசுத் துறைகளின் சார்பில் காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மலர்க்காட்சியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை 8.55 மணிக்கு தொடக்கி வைக்கிறார். 3 நாள்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மே 21) மாலை நடைபெறவுள்ளது. இதில், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பரிசளிக்கிறார்.