கூடலூர் நகரில் திடக்கழிவு மேலாண்மைக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கூடலூர் நகராட்சி ஆணையர் பார்வதி விடுத்துள்ள அறிக்கை:
கூடலூர் நகராட்சிப் பகுதியில் தினசரி சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் 2006-இன்கீழ் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்கு உள்பட்ட கடைகள் உணவகங்கள், வீடுகள், தொழிற்சாலைகளில் தினசரி சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும்.
தெருக்கள், சாலையோரங்கள், கால்வாய்கள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுபவர்களுக்கும், மக்கும் கழிவுகளுடன் பிளாஸ்டிக் கழிவுகளைக் கலந்து வழங்குபவர்களுக்கும் அபராதம் விதிக்க திடக்கழிவு மேலாண்மைத் திட்ட விதிப்படி நகராட்சி துணை விதிகளுக்கு உள்பட்டு 1.7.2017 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. ஒத்துழைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். நகரை சுகாதாரமாக வைத்துக் கொள்ள நகராட்சி நிர்வாகத்துக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.