கோத்தகிரியில் பேரிடர் பயிற்சி முகாம்
கோத்தகிரியில் இரண்டு நாள் பேரிடர் பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவடைந்தது.
கோத்தகிரியில் இரண்டு நாள் பேரிடர் பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவடைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் வட கிழக்கு பருவ மழை தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நெடுஞ்சாலைத் துறை மூலம் மண் மூட்டைகள் தயாரிக்கும் பணி, கழிவு நீர் கால்வாய் அமைப்புகள் சரிசெய்தல், சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றி சாலையை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, வனத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், கிராம இளைஞர்களை ஆகியோரை கொண்ட குழுக்கள் அமைத்து அவர்களுக்கு பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி காந்தி மைதான புயல் நிவாரண கட்டடத்தில் முதன்மை பொறுப்பாளர்களுக்கான 2 நாள் பேரிடர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பயிற்சி முகாமில், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உள்பட அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.