பெண்ணைத் தாக்கிய கரடியைப் பிடிக்க 2-ஆவது நாளாக வனத் துறையினர் தீவிரம்
கூடலூரை அடுத்துள்ள மே பீல்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளியைத் தாக்கிய கரடியைப் பிடிக்க இரண்டாவது நாளாக வனத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடலூரை அடுத்துள்ள மே பீல்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளியைத் தாக்கிய கரடியைப் பிடிக்க இரண்டாவது நாளாக வனத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வருவாய்க் கோட்டத்தில் உள்ள தேவர்சோலை பகுதியில் உள்ள மே பீல்டு தனியார் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த அம்மாளு என்ற பெண் தொழிலாளியை கரடி தாக்கியது. இதையடுத்து, அவர் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதையடுத்து, தேயிலைத் தோட்டத்தில் கரடி நடமாடும் பகுதியில் கூண்டு வைத்தும், மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், கண்காணிப்புப் பணியில் 20 பேர் கொண்ட குழுவினர் இரவு, பகலாகத் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரடியின் நடமாட்டம் புதன்கிழமை காலை வரையில் கேமராவில் பதிவாகவில்லை. இருப்பினும், வனத் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.