வால்பாறையில் விடியவிடிய பெய்த பலத்த மழை காரணமாக அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக வால்பாறை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்கிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து உயர்ந்துள்ளது.
இதேபோல, தேயிலைத் தோட்டங்களை ஒட்டி அமைந்துள்ள நீரோடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் தற்போது 120 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.