தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ், உதகையில் விழிப்புணர்வு ரத இயக்கம் தொடங்கப்பட்டது.
தூய்மையே சேவை என்ற இயக்கம் நீலகிரி மாவட்டத்ததில் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. தூய்மை பாரதம் சார்ந்த பணிகளை அனைத்து நிலைகளிலும் முடுக்கி விடுவதற்காகவும், சுகாதாரத்தைப் பேணிக் காப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தவும் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது.
இத்திட்டம் தொடங்கப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து நிலை அலுவலர்களாலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளைத் தொடர்ந்து கண்காணிக்க மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக தூய்மை ரதத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உதகையில் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார். இத்தூய்மை ரதத்தில் தனிநபர் இல்லக் கழிவறைகள் கட்டுதல், அதன் முக்கியத்துவம் தொடர்பான படங்கள் திரையிடப்பட்டன.
ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட தூய்மை ரத பயணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
இதில், பேரூராட்சி, நகராட்சித் துறை சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர். வழியெங்கும் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.