4 நாள்கள் தொடர் விடுமுறை: உதகை-மேட்டுப்பாளையம் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
மகாவீர் ஜயந்தி, புனித வெள்ளி ஆகிய தினங்களையொட்டி 4 நாள்கள் தொடர் விடுமுறை வருவதால், உதகை- மேட்டுப்பாளையம் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
மகாவீர் ஜயந்தி, புனித வெள்ளி ஆகிய தினங்களையொட்டி 4 நாள்கள் தொடர் விடுமுறை வருவதால், உதகை- மேட்டுப்பாளையம் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி:
வரும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை என்பதால், வெளியூர்களிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அதிகப்படியான வாகனங்களால் ஏற்படும் நெருக்கடியைக் கருதி, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாகவே அனுமதிக்கப்படும். உதகையிலிருந்து கோவை, மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். எக்காரணம் கொண்டும் பர்லியாறு வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. இதற்கு லாரி ஓட்டுநர்கள், வாகன ஓட்டுநர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இருப்பினும், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் வழக்கமான வழித் தடங்களில் அனுமதிக்கப்படும். போக்குவரத்து மாற்றங்கள் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு
வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.