கூடலூர் கோடை விழா: தோட்டக் கலைத் துறைக்கு முதல் பரிசு
பிரமாண்ட வாண வேடிக்கைகளுடன் கூடலூர் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவு பெற்றது.
பிரமாண்ட வாண வேடிக்கைகளுடன் கூடலூர் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவு பெற்றது.
நீலகிரி கோடை விழா மற்றும் வாசனை திரவியக் கண்காட்சி வெள்ளிக்கிழமை முதல் கூடலூர் புனித தாமஸ் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் முருகையன் தலைமை வகித்தார். தோட்டக் கலைத் துறை சார்பில் வாசனை திரவிய பொருள்களால் அமைக்கப்பட்டிருந்த வள்ளுவர் கோட்டத்துக்கு முதல் பரிசு வழங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சிறப்பாக அரங்கம் அமைத்தவர்களுக்கும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவு விழாவையொட்டி பிரம்மாண்ட வாண வேடிக்கை நடைபெற்றது.
விழாவில் ஆவின் தலைவர் அ.மில்லர், கூடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.திராவிடமணி, தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர் எஸ்.ஜெயலட்சுமி, கூடலூர் வட்டாட்சியர் ரவி, தனி வட்டாட்சியர்கள் ஜான் மனோகர், கிருஷ்ணமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் ஆரி, கூடலூர் நகராட்சி ஆணையாளர் பார்வதி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள மற்றும் பணியாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் ராமசாமி, தாமஸ், நகர் மன்ற முன்னாள்துணைத் தலைவர் ராஜா தங்கவேலு, பத்மநாபன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.