காரமடை பேரூராட்சியில் ரூ 5.22 கோடியில் மின்மேம்பாட்டுப் பணிகள் துவக்கம்
காரமடை பேரூராட்சியில் ரூ. 5.22 கோடி மதிப்பில் மின் வாரிய மேம்பாட்டு திட்டப் பணிகளின் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காரமடை பேரூராட்சியில் ரூ. 5.22 கோடி மதிப்பில் மின் வாரிய மேம்பாட்டு திட்டப் பணிகளின் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சிக்குள்பட்ட ஆசிரியர் காலனி பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தொகுதி எம்எல்ஏ ஓ.கே. சின்னராஜ் தலைமை வகித்து திட்டப்பணிகளை துவக்கிவைத்தார். மேட்டுப்பாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் ராஜா சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இதில் தொழிலதிபர் நந்தகுமார், மின் வாரிய உதவி பொறியாளர் கண்ணன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் முத்துசாமி, மின் வாரிய ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இப்பணிகள் குறித்து மின் வாரிய செயற்பொறியாளர் ராஜா சந்திரசேகரன் கூறியதாவது:
காரமடை பேரூராட்சிப் பகுதிகளில் நவீன தொழில்நுட்பங்களை கொண்ட மின் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த மின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ. 5.22 கோடி மதிப்பில் மின் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனடிப்படையில் 24 புதிய மின் மாற்றிகள், 2.3 கி.மீ தொலைவுக்கு மின் புதைவிட கம்பிகள், 28 கி.மீ தொலைவுக்கு ஒருமுனை மின்சார வழியை மும்முனை வழியாக மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.