ரெப்கோ வங்கி சார்பில் கூடலூர், பந்தலூர் பகுதியிலுள்ள தாயகம் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள், நோட்டு புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
ரெப்கோ வங்கியின் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில், கூடலூர் புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ரெப்கோ வங்கியின் இயக்குநர் பி.மகாலிங்கம் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், 190 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.1000 மதிப்பிலான இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் சார்லஸ் பாபு, ரெப்கோ வங்கியின் டெலிகேட்ஸ் யூனியனின் தென்னிந்திய தலைவர் சு.ஆனந்தராஜா, துணைத் தலைவர் கிருஷ்ணபாரதியார், மாவட்ட பிரதிநிதி வேலு ராஜேந்திரன், உறுப்பினர்கள் பரமேஸ்வரன், லோகநாதன், மோகன்தாஸ், கூடலூர் ரெப்கோ வங்கியின் கிளை மேலாளர் ஏ.தட்சிணாமூர்த்தி, பந்தலூர் கிளை மேலாளர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கமல்குமார்,உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இங்கு 500 மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளும், நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன.
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 மாணவிகளுக்கும், கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 450 மாணவ, மாணவிகளுக்கும் தலா ரூ.1000 மதிப்பிலான சீருடை, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.