உதகையில் உள்ள மாரியம்மன் திருக்கோயில், எல்க்ஹில் பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆகியவற்றில் நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு நடத்தினார்.
கோயில்களில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும், சுகாதார வசதிகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளனவா என்பதை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தி இருந்தது.
அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, மாவட்ட நீதித் துறை நடுவர் சுரேஷ்குமார் ஆகியோர் உதகையில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தனர். கோயில் வளாகம் முழுவதையும் சுற்றிப் பார்த்த பின்னர் அங்குள்ள அடிப்படை வசதிகளான குடி நீர், கழிவறை வசதிகள், அமர்ந்து ஓய்வெடுக்கக் கூடிய பகுதிகள், காற்றோட்டமான மற்றும் வெளிச்சம் தரக்கூடிய பகுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
அத்துடன் இது தொடர்பான விளக்கங்களையும் கோயில் செயல் அலுவலர் பொன்.சி.லோகநாதனிடம் கேட்டு அறிந்ததோடு, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடமும் குறைகள் குறித்துக் கேட்டறிந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வுக்குப் பின்னர் எல்க்ஹில் மலைப் பகுதிக்குச் சென்ற நீதிபதிகள் அங்குள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் இதே போன்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி, அங்கிருந்த பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் கருத்து கேட்டனர். இது குறித்த ஆய்வு அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் விரைவில் அனுப்பி வைப்பார்கள் என தெரிகிறது.
நீதிபதிகள் திடீரென கோயில்களுக்கு நேரில் வந்து விசாரணை நடத்திய சம்பவம் உதகை நகரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.