உதகையில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்: 60% ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உதகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ அமைப்பின் சார்பில் அண்ணாதுரை, பிராங்ளின் ஆகியோரும், ஜியோ அமைப்பின் சார்பில் சுப்பிரமணி, குமாரராஜா ஆகியோரும் தலைமையேற்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஜாக்டோ- ஜியோ சார்பில் அமைப்பாளர் ஸாகிரா கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெறும் தொடர் போராட்டம் காரணமாக செவ்வாய்க்கிழமை நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீத ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. உதகையில் ஊரக வளர்ச்சித் துறையில் 95 %, வேலைவாய்ப்புத் துறையில் 100% ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. செவ்வாய்க்கிழமை உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை உதகையில் ஏடிசி சுதந்திர சதுக்கப் பகுதியில் மறியல் போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை உதகையில் மத்தியப் பேருந்து நிலையம் எதிரிலும், 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உதகையில் சேரிங்கிராஸ் பகுதியிலும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.