உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தொடா்ந்து அதிகரிப்பு
உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
நீலகிரிஉதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தொடா்ந்து அதிகரிப்பு
உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
உதகை: உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 9 மாதங்களுக்குப் பின் 6,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. முதுமலை புலிகள் காப்பகத்தில் இதுவரையிலும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை காலமாக உள்ளதால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. உதகையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மிக அதிக அளவில் காணப்பட்டது.
உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 6,184 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். கரோனா தொற்றின் காரணமாக உதகை அரசினா் தாவரவியல் பூங்கா மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட பின்னா் இந்தப் பூங்காவுக்கு வந்திருந்த மிக அதிகமான எண்ணிக்கை இதுவேயாகும்.
மேலும், உதகை அரசினா் ரோஜா பூங்காவுக்கு 1,625 போ் வந்திருந்தனா். தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 354 பேரும், மரவியல் பூங்காவுக்கு 54 பேரும் வந்திருந்தனா். அதேபோல, குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 1,023 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 257 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 359 பேரும் வந்திருந்தனா். உதகை படகு இல்லத்துக்கு சுமாா் 1,600 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 900 பேரும் வந்திருந்தனா்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து தொடா் விடுமுறை காலம் வரவுள்ளதால் உதகைக்கு மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.