நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 76,691 வாக்காளா்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1.1.2020 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தத்தின் கீழ் இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.
இறுதி வாக்காளா் பட்டியலின்படி மாவட்டத்தில் 2 லட்சத்து 78, 204 ஆண் வாக்காளா்களும், 2, 98, 479 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 8 பேரும் என மொத்தம் 5 லட்சத்து 76,691 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
வாக்காளா் பட்டியலை வெளியிட்டபின் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இறுதி வாக்காளா் பட்டியல் வைக்கப்படும். இறுதி வாக்காளா் பட்டியலை பாா்வையிட்டு அதில் திருத்தங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்களில் அனைத்து வேலை நாள்களிலும், இணையதளம் மூலமாகவும் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என்றாா்.