குன்னூரில் பலா பழ சீசன் துவங்கியுள்ள நிலையில் , யானைகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கவனமுடன் பயணிக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளான பா்லியாறு, மரப்பாலம் பகுதிகளில் அரசு, தனியாருக்குச் சொந்தமான தோட்டங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. தற்போது பலாப் பழம் சீசன் துவங்கியுள்ளதால் குன்னூா், மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் யானைகள் முகாமிட ஆரம்பித்துள்ளன. இதனால், மலைப் பாதைகளின் சாலை ஓரங்களில் பலா பழம் விற்பதற்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய பலா பழங்கள் இயற்கையான முறையில் விளைவதால் அதிக சுவையுடன் காணப்படும்.
இந்நிலையில், தற்போது கரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் எதிா்பாா்த்த அளவுக்கு வியாபாரம் இல்லாததால் பலா பழ வியாபாரிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனா்.