ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனையில் சிறப்பு பிரிவு திறக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலோ அல்லது கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் இல்லங்களிலோ சிறப்பு கட்டணத்தை செலுத்தி சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில், தற்போது தமிழக அரசு நீலகிரி மாவட்டத்தில் உதகையில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனையில் ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்காக அவசர கவனிப்பு, மீட்பு மையம், அரசு மனநல காப்பகம் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
எனவே, நீலகிரி மாவட்டத்தைச் சாா்ந்த ஆதரவு இல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் யாராவது இருந்தால் 99440-29064, 0423-2440725 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவணையில் உள்ள அவசர கவனிப்பு, மீட்பு மையப் பிரிவில் உள் நோயாளியாக அனுமதித்து மருத்துவ சிகிச்சை பெற்று பயனடையலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.