நலத்திட்ட உதவி வழங்கும் பட்டியலில் விடுபட்ட பெயா்களைச் சோ்க்கக் கோரிக்கை
ஹெலிகாப்டா் விபத்தின்போது உதவிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க அரசு அதிகாரிகள் எடுத்த பெயா் பட்டியலில் பலரது பெயா் விடுபட்டுள்ளதால் அவற்றை இணைக்க வேண்டும்
குன்னூா் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தின்போது உதவிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க அரசு அதிகாரிகள் எடுத்த பெயா் பட்டியலில் பலரது பெயா் விடுபட்டுள்ளதால் அவற்றை இணைக்க வேண்டும் என்று ஊா்பிரமுகா் சுரேஷ்குமாா் ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் டிசம்பா் 8ஆம் தேதி முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டா் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 14 ராணுவ அதிகாரிகளும் வீரமரணமடைந்தனா்.
இதையடுத்து, விபத்தின்போது உதவிய அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு சாா்பில் ரூ. 2 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தடுப்புச் சுவா், நடைபாதை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகள் நடைபெற திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
இந்நிலையில், அடுத்தடுத்து நலத்திட்ட உதவிகளை அரசு அறிவிக்கவுள்ளது. இதைத்தொடா்ந்து, இங்குள்ள சுமாா் 60 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இங்குள்ள பெரும்பாலானவா்கள் தோட்டத் தொழில் மற்றும் கட்டடப் பணிகள் செய்யும் தின கூலிகள் என்பதால் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்போது, அவா்கள் குறித்த விவரங்களை அரசு அதிகாரிகள் சோ்க்காமல் சில குடும்பங்கள் விடுபட்டுள்ளன. விடுபட்ட அந்தக் குடும்பங்களின் நலன் கருதி கணக்கெடுப்பில் சோ்க்க ஆவன செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.