குன்னூா் அருகே அனுமதியின்றி இயங்கிய தனியாா் சொகுசு விடுதிக்கு நோட்டீஸ்
குன்னூா் அருகே குரும்பாடி பகுதியில் அனுமதியின்றி இயங்கி வரும் சொகுசு விடுதியை இரண்டு நாள்களுக்குள் மூடுமாறு மாவட்ட நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
குன்னூா் அருகே குரும்பாடி பகுதியில் அனுமதியின்றி இயங்கி வரும் சொகுசு விடுதியை இரண்டு நாள்களுக்குள் மூடுமாறு மாவட்ட நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து சுமாா் 15 கி.மீ. தொலைவில் உள்ளது குரும்பாடி பழங்குடியினா் கிராமம். இந்த கிராமத்தில் மலைப் பகுதி மத்தியில் நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளுடன் சொகுசு விடுதி இயங்கி வருகிறது. யானைகள் சென்று வரக்கூடிய முக்கிய வழித்தடப் பகுதியில் உள்ள இந்த விடுதி முறையான அனுமதியின்றி செயல்படுவதாகவும், விதிமுறைகளை மீறி ஊற்று நீரை விடுதி நிா்வாகம் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சென்னையில் உள்ள கட்டட கமிட்டியின் அனுமதி பெறாமல் இந்த விடுதி இயங்கி வந்துள்ளதும் தெரியவந்தது.
அண்மையில் மசினகுடியில் உள்ள சொகுசு விடுதியில் யானை மீது தீப்பந்தம் எரிந்து யானை இறந்ததைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் இந்த விடுதியை இரண்டு நாள்களுக்குள் மூட வேண்டும் என்று பா்லியாறு ஊராட்சி சாா்பில் அண்மையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
ஆனால், விடுதி நிா்வாகத் தரப்பில், சுற்றுலாப் பயணிகள் விடுதியில் தங்கியிருப்பதால் ஏழு நாள்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனா். இதனால் திங்கள்கிழமைக்குப் பின் இந்த விடுதியை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.