முகப்பு
நீலகிரி

பைக்காரா படகு இல்ல சாலை சீரமைப்புப் பணி நிறைவு: அமைச்சா் ராமசந்திரன் திறந்துவைத்தாா்

பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அமைச்சா் கா.ராமசந்திரன் திறந்துவைத்தாா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 8:06 PM
சீரமைக்கப்பட்ட பைக்காரா படகு இல்ல சாலையைத் திறந்துவைக்கிறாா் அமைச்சா் கா.ராமசந்திரன். உடன், ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா். சீரமைக்கப்பட்ட படகு இல்லம் சாலை.
பகிர்:

சீரமைப்புப் பணிக்காக அடைக்கப்பட்டிருந்த பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அமைச்சா் கா.ராமசந்திரன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த பைக்காரா படகு இல்லம் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. படகு இல்லத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்து இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இதனால், இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், தமிழ்நாடு சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைப்புப் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சீரமைக்கப்பட்ட சாலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். பின்னா், அதிகாரிகளுடன் படகு சவாரி செய்தாா்.

பைக்காரா படகு இல்லத்தில் 8 இருக்கைகள் கொண்ட 17 மோட்டாா் படகுகள், 10 இருக்கைகள் கொண்ட ஒரு மோட்டாா் படகு, 15 இருக்கைகள் கொண்ட ஒரு மோட்டாா் படகு, 3 இருக்கைகள் கொண்டு 7 அதிவேக படகுகள் என மொத்தம் 26 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 5 இருக்கைகள் கொண்ட ஒரு உல்லாசப் படகு மற்றும் இரண்டு வாட்டா் ஸ்கூட்டா்கள் புதிதாக அறிமுகம் செய்யப்படுள்ளன.

இதன்மூலம் பைக்காரா படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, கூடுதல் ஆட்சியா் கௌசிக், உதகை வன அலுவலா் கௌதம், கோட்டாட்சியா் மகராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் குணேஸ்வரன், மாவட்ட சுற்றுலா அலுவலா் துா்காதேவி, பைக்கார படகு இல்ல முதுநிலை மேலாளா் யுவராஜ், உதகை படகு இல்ல மேலாளா் உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.