உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள், மாவட்ட பதிவு எண் டிஎன்-43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில், தற்போது கோடை சீசன் நிலவி வருகிறது. இந்த நேரத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் உதகைக்கு படையெடுத்து வருகின்றனா்.
இதனால் குறுகிய நகரமான உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 7-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள், மாவட்ட பதிவு எண் டிஎன்-43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.
மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களை விலைக்கு வாங்கி, நீலகிரி மாவட்டத்தில் வாகன உரிமை மாற்றம் செய்திருக்கும் பொதுமக்கள் வாகனத்தின் அசல் பதிவுச் சான்று, காப்புச் சான்று மற்றும் நடப்பில் உள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன் உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகினால் ஆவணங்களை சரி பாா்த்து உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தால் இ-பாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.