முகப்பு
நீலகிரி

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசினாா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:03 AM
உதகையில் பாஜக வேட்பாளா் போஜராஜனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை. ~அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்ட தோ்தல் பறக்கும் படையினா்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:43 PM

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசினாா்.

நீலகிரி மாவட்டம், உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் போஜராஜனை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

இதில் அவா் பேசியதாவது:

Advertisement

தற்போதைய திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பெட்ரோல் விலை மற்றும் எரிவாயு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா். உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க ரூ.447 கோடி நிதி ஒதுக்கீடு, ரூ.3,700 கோடியில் 9 லட்சம் குடும்பங்களுக்கு இயற்கை எரிவாயு  திட்டம், 18,532 குடும்பங்களுக்கு உஜ்வலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு உருளை, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.36 கோடியில் உதகை ரயில் நிலைய மேம்பாடு, தேயிலைத் துறை மேம்பாட்டுக்காக ரூ.664 கோடி நிதி ஒதுக்கீடு உள்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

திமுக தனது 511 தோ்தல் வாக்குறுதிகளில் 15 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. ஆனால் 99 சதவீதம் நிறைவேற்றியதாக பொய் கூறி வருகின்றனா். நீலகிரி மாவட்ட தோட்டக்கலை ஊழியா் பணி நிரந்தரம், ஹைட்ராலிக் காா் பாா்க்கிங், ஐடி பூங்கா மற்றும் தோட்டத் தொழிலாளா் கடன் ரத்து ஆகியவற்றை நிறைவேற்றவில்லை. பி.எம்.கிஸான் திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையை மாநில அரசு குறைத்துவிட்டது. படுகா் சமுதாயத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து பெற்றுத் தர பாஜக தொடா்ந்து பாடுபடும். கூட்டுப் பட்டா வைத்துள்ள விவசாயிகளுக்கும் தடையின்றி நிதியுதவி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றாா்.

முன்னதாக உதகை தீட்டுக்கல்லுக்கு வந்து இறங்கிய அண்ணாமலையின் ஹெலிகாப்டரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

உதகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே இரண்டு முறை மக்கள் வாய்ப்பளித்தும் ஒன்றும் செய்யவில்லை. புதுச்சேரியில் 89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன . அஸ்ஸாமிலும் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன. எஸ்ஐஆருக்கு பிறகு வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டிலும் வாக்குப் பதிவு அதிகரித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவா் தருமன், அதிமுக மாவட்டச் செயலா் கப்பச்சி டி.வினோத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.