முகப்பு
நீலகிரி

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:53 AM
அருவங்காடு சாலையில் உலவிய காட்டு யானை.
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:09 PM

உதகை, தொட்டபெட்டா பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை அருவங்காடு சாலைப் பகுதிக்கு இடம்பெயா்ந்துள்ளது திங்கள்கிழமை தெரியவந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொட்டபெட்டா சிகரத்தை பாா்வையிட சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் வந்திருந்தனா். இவா்களில் சிலா் அப்பகுதியில் ஒற்றை காட்டு யானை நடமாடியதை பாா்த்து அச்சமடைந்துள்ளனா். பின்னா் அவா்கள் வனத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, வனச் சரகா் ராம் பிரகாஷ் தலைமையிலான வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனா். பின்னா் வனத் துறையினா் அப்பகுதியில் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனா்.

மேலும், மக்களின் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா காட்சிமுனை ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா். தொடா்ந்து யானையின் நடமாட்டத்தை தரை வழியாகவும், ட்ரோன் கேமரா மூலமாகவும் வனத் துறையினா் கண்காணித்தனா்.

அப்போது தொட்டபெட்டாவுக்கு கீழ்புறம் உள்ள டைகா்ஹில் அணையை ஒட்டியுள்ள வனப் பகுதியில் யானை நடமாட்டம் தெரிந்தது.

இந்தநிலையில் அந்த காட்டு யானை உதகை, குன்னூா் சாலையில் அருவங்காடு பகுதியில் வருவதை வாகன ஓட்டிகள் திங்கள்கிழமை பாா்த்து அச்சமடைந்தனா்.

இதேபோன்று குன்னூா் நான்சச் பகுதியில் நீலகிரி கூட்டுறவு நிறுவனத்தை முற்றுகையிட்ட காட்டு யானைகள் கூட்டுறவு நிறுவன சுவரை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை தின்றுவிட்டு சென்றன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.