வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புஅங்கன்வாடி ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 120 பேர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவி பி.மோகனாம்பாள் தலைமை வகித்தார். சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.கஸ்தூரி, ஒன்றியப் பொருளாளர் எஸ்.விமலா முன்னிலை வகித்தனர்.
இதில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு இளநிலை ஊதியமும், உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியமும் வழங்குவதோடு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2016 ஜனவரி முதல் ஊதியக்குழு நிலுவைத் தொகை, மே மாதம் கோடை விடுமுறை, சனிக்கிழமை விடுமுறை போன்றவற்றை வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்திக் கோஷம் எழுப்பப்பட்டது. இதில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை, சத்துணவுத் துறை, நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
காங்கயத்தில்...: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் காங்கயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கயம் வட்டார அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கப் பொறுப்பாளர் ஜெயமேரி தலைமை வகித்தார். ஒன்றியப் பொறுப்பாளர் மல்லிகா முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சித்ரா கோரிக்கையை வலியுறுத்திப்
பேசினார். இதில், காங்கயம் வட்டாரத்தில் உள்ள 97 அங்கன்வாடி மையங்களின் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
அவிநாசியில்...: அவிநாசியில் அங்கன்வாடி ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்டார இணைச் செயலாளர் இரா.இந்திராணி தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் ஆர்.ராமன், வட்டக்கிளைச் செயலாளர் ஆர்.கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டப் பொருளாளர் கோ.தனலட்சுமி, துணைத் தலைவர் ப.ச.நாகலட்சுமி, சிஐடியூ மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் பி.முத்துசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.