பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட சென்னியப்பா நகரில் சீரான குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட சென்னியப்பா நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளுக்கு கடந்த 6 மாதங்களாக சீரான குடிநீர் வழங்கப்படாததால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் விநியோகத்தை சீர்படுத்தவும், தெருவிளக்குகளைப் பராமரிக்கவும், சாக்கடைக் கால்வாய் வசதியை விரிவுபடுத்தக் கோரியும் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், பெருமாநல்லூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், ஊராட்சிச் செயலர் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஓரிரு நாள்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.