"சாதனை படைத்த கலைஞர்கள் அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்'
கலைத் துறையில் சாதனைப் படைத்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள், அரசு விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைத் துறையில் சாதனைப் படைத்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள், அரசு விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தின் கலைப் பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைப் பண்புகளைச் சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும், மாவட்ட கலை மன்றம் மூலமாக ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.
இதில், 18 வயதுக்கு உள்பட்டோருக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயது பிரிவினருக்கு கலை வளர்மணி, 36 வயது முதல் 50 வயது பிரிவினருக்கு கலை சுடர்மணி, 51 வயது முதல் 60 வயது பிரிவினருக்கு கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு கலை முதுமணி என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கப்பட உள்ளன.
குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், சிற்பம், நாடகக் கலைஞர்கள், நாகசுரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞர்கள். கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, அரசன் மற்றும் அரசி ஆட்டம், மரக்கால் ஆட்டம், தெருக்கூத்து ஆகிய கலைகள் உள்ளிட்ட கிராமியக் கலைகளைத் தொழிலாகக் கொண்டு, கலைத் துறையில் சாதனை படைத்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவ் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாவட்டக் கலை மன்ற விருதாளர் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் கலைஞர்களுக்கு, அரசு விழாவில் இவ்விருது வழங்கப்படும்.
கலைஞர்கள் விருது பெற தங்களது சுய விவரக் குறிப்புடன், வயது மற்றும் பணியறிவு ஆகியவற்றைக் குறிப்பிட்டு நிழற்படம் இணைத்து, சான்றுகளுடன், உதவி இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், அரசு இசைக் கல்லூரி
வளாகம், செட்டிப்பாளையம் பிரிவு, மலுமிச்சம்பட்டி (அஞ்சல்), கோயம்புத்தூர் - 641 050 என்ற முகவரிக்கு, வரும் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விவரங்களுக்கு 0422 - 2610290 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.