சீரான குடிநீர் வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொது மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
அவிநாசி ஒன்றியம், தத்தனூர் ஊராட்சிக்கு உள்பட்ட சுள்ளிப்பாளையம், தெற்கு வீதி, சாவக்கட்டுப்பாளையம், சந்தைமேடு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் கடும் அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள் அதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் மனு அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சீரான குடிநீர் வழங்கக் கோரி தத்தனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேவூர் போலீஸார், அவிநாசி ஒன்றிய ஆணையர் முருகேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், கூட்டப்பள்ளி தரைமட்ட நீர்த்தேக்கக் தொட்டியில் இருந்து உடனடியாக சந்தைமேடு பகுதி தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு குழாய் பதித்து, 7 நாள்களுக்குள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொது மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர்.