காங்கயத்தில் தனியார் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைக்கு பாதை அமைக்க வாரச் சந்தைக்கு சொந்தமான இடம் அபகரிக்கப்பட்டுள்ளது.
காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள வாரச் சந்தை வளாகத்தில் புதிய பேருந்து நிலையம், தினசரி மார்க்கெட், வணிக வளாகம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இடம் எடுக்கப்பட்டதால் சந்தையின் பரப்பளவு குறைந்துள்ளது.
இதனால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காங்கயத்தில் கால்நடைகளுக்கான சந்தை என்பதே இல்லாமல் போய்விட்டது.
இந்நிலையில், காங்கயம் வாரச் சந்தை அருகே, திருப்பூர் சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைக்கு பாதை அமைக்க, வாரச் சந்தைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகப் புகார்
எழுந்துள்ளது.
இதுகுறித்து, நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு கட்சியினர், பொது நல அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.