ஏர்செல் சேவை பாதிப்பு: வாடிக்கையாளர்கள் முற்றுகை
ஏர்செல் நிறுவனத்தின் தொலைதொடர்பு சேவை பாதிப்பு காரணமாக, திருப்பூரில் அந்நிறுவன சேவை மையத்தை வாடிக்கையாளர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
ஏர்செல் நிறுவனத்தின் தொலைதொடர்பு சேவை பாதிப்பு காரணமாக, திருப்பூரில் அந்நிறுவன சேவை மையத்தை வாடிக்கையாளர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
ஏர்செல் நிறுவனம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் ஏர்செல் தொலைதொடர்பு சேவையானது கடந்த சில நாள்களாக சீராக இல்லை என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே ஏர்செல் நிறுவன தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் செல்லிடப்பேசிகளில் அழைப்புகளோ, குறுஞ்செய்திகளோ, இணைய சேவைகளோ கிடைக்கவில்லை. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.நீண்ட நேரமாக நீடித்த தொலைதொடர்பு சேவை பாதிப்பால் அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்கள், திருப்பூர், குமரன் சாலையில் உள்ள அந்நிறுவன வாடிக்கையாளர் சேவை மையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீஸார், முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினர். அப்போது, நாடு முழுவதும் இப்பிரச்னை நிலவுவதாகவும், ஓரிரு நாளில் பிரச்னை சீராகி விடும் என்றும் பணியாளர்கள் தெரிவித்தனர். இப்பிரச்னையால் குமரன் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.