ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் தொலைபேசியில் பேச்சு
மேற்கு ஆசிய பதட்டங்களுக்கு மத்தியில் ஈரான் வெளியுறவு அமைச்சா் சையது அப்பாஸ் அராக்சியுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் பேசியது குறித்து...
புது தில்லி: மேற்கு ஆசிய பதட்டங்களுக்கு மத்தியில் ஈரான் வெளியுறவு அமைச்சா் சையது அப்பாஸ் அராக்சியுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினாா்.
இதுதொடா்பாக அமைச்சா் ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தற்போது நடைபெற்றும் வரும் போர் தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சா் அராக்சியுடன் விரிவாக கலந்துரையாடினேன். இருவரும் தொடா்ந்து தொடா்பில் இருக்க ஒப்புக்கொண்டோம் என்றாா்.
ஈரான் போா் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் இடா்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளது குறித்து உலக அளவில் கவலை அதிகரித்துள்ள நிலையில், இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனா்.
கடந்த மாதம் ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டு ராணுவத் தாக்குதலை தொடங்கிய பின்னா், தற்போது 3-ஆவது முறையாக அராக்சியுடன் ஜெய்சங்கா் பேசியுள்ளாா்.
விரிவடைந்து வரும் மேற்கு ஆசிய பதட்டங்கள் குறித்த நிலைப்பாடுகளை ஒருங்கிணைக்க உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய கூட்டாளர்களை இந்தியா தொடர்ந்து அணுகுவதன் ஒரு பகுதியாக ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல் மற்றும் தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூன் ஆகியோருடனும் மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து ஜெய்சங்கர் பேசினார்.
உலக அளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமாா் 20 சதவீதம், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா இடையிலான ஹோா்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அந்த நீரிணையை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.