சந்தைக்கு வரத்து அதிகரிப்பு: கோழிகள் விலை வீழ்ச்சி
குண்டடம் வாரச் சந்தையில் வரத்து அதிகரிப்பால் கோழிகளின் விலை வீழ்ச்சியடைந்தது.
குண்டடம் வாரச் சந்தையில் வரத்து அதிகரிப்பால் கோழிகளின் விலை வீழ்ச்சியடைந்தது.
குண்டடத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் கூடும் வாரச் சந்தைக்கு சுற்றுவட்டார விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகள், கோழிகளைக் கொண்டுவருவது வழக்கம். ஆடுகள், கோழிகளை மேச்சேரி, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
வழக்கமாக குண்டடம் சந்தைக்கு 1,500 முதல் 2,500 கோழிகள் விற்பனைக்குக் கொண்டுவரப்படும். இந்த வாரம் திடீரென 4,000 கோழிகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. வரத்து அதிகரிப்பால் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த வாரம் கோழி கிலோ ரூ. 280 முதல் 350 வரை விலைபோனது. இந்த வாரம் ரூ.260 முதல் ரூ. 320 வரை மட்டுமே விலைபோனது. சண்டைச் சேவல்கள் ரூ. 2,500 முதல் ரூ. 4,000 வரை விலைபோகும் நிலையில் இந்த வாரம் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரைதான் விற்பனை ஆனது.