மடிக்கணினி வாங்க சேர்த்த பணத்தில் காங்கேயம் இன கன்றுக் குட்டி வாங்கிய மாணவர்
காங்கயம் அருகே மடிக்கணினி வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில் மாடு வளர்க்க ஆசைப்பட்டு மாட்டுச் சந்தையில்
காங்கயம் அருகே மடிக்கணினி வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில் மாடு வளர்க்க ஆசைப்பட்டு மாட்டுச் சந்தையில் கன்றுக்குட்டி வாங்கிச் சென்ற மாணவரின் செயலைப் பார்த்து விவசாயிகள் வியப்படைந்தனர்.
ஈரோடு மாவட்டம், சிவகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர் பொன்.சிவவேல். இவர் மடிக்கணினி வாங்க ஆசைப்பட்டு பெற்றோர் செலவுக்குக் கொடுத்த பணத்தை சேமித்து வந்தார். இந்நிலையில், காங்கேயம் இன மாடு வளர்க்க மாணவர் சிவவேல் ஆசைப்பட்டுள்ளார். அதற்காக, கன்றுக் குட்டி வாங்குவதற்காக தனது தந்தையை அழைத்துக் கொண்டு திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் கூடும் காங்கேயம் இன மாடுகள் மட்டும் விற்பனை செய்யப்படும் மாட்டுச் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) சென்றுள்ளார்.
காங்கேயம் இன கன்றுக் குட்டிகளின் குறைந்தபட்ச விலையே ரூ.30 ஆயிரத்தை தாண்டும். இதனால், கன்றுக் குட்டி வாங்குவதற்காக ரூ.19 ஆயிரத்துடன் மாட்டுச் சந்தைக்கு வந்த சிவவேல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
இது குறித்து தகவல் அறிந்த மாட்டுச் சந்தை ஏற்பாட்டாளர்கள், மாணவரின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜூலை 8-ஆம் தேதி நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு வருமாறு சிவவேலை முன்கூட்டியே அழைத்துள்ளனர்.
சந்தைக்குச் சென்ற மாணவருக்கு மாட்டுச் சந்தை ஏற்பாட்டாளர்கள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து மொத்தம் ரூ.13 ஆயிரத்தைக் கொடுத்தனர். தான் கொண்டு சென்ற ரூ.19 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.32 ஆயிரத்துக்கு காங்கேயம் இன கிடாரிக் கன்றை மாணவர் வாங்கிச் சென்றார். மாணவப் பருவத்திலேயே மாடு வளர்க்க வேண்டும் என்ற சிவவேலின் ஆர்வத்தைக் கண்டு விவசாயிகள் வியப்படைந்தனர்.