குடியிருப்பு பகுதியில் இறந்துகிடந்த மயில்
ஊத்துக்குளியில் குடியிருப்புப் பகுதியில் உயிரிழந்து கிடந்த மயிலை மீட்க வனத் துறையினர் வராத காரணத்தால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
ஊத்துக்குளியில் குடியிருப்புப் பகுதியில் உயிரிழந்து கிடந்த மயிலை மீட்க வனத் துறையினர் வராத காரணத்தால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சியில் 2-ஆவது வார்டுக்கு உள்பட்ட காவேரி நகரில் குடியிருப்பு பகுதியில் மயில் ஒன்று புதன்கிழமை காலை உயிரிழந்து கிடந்தது. இதைப் பார்த்த குடியிருப்புவாசிகள் ஊத்துக்குளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சார்பில் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
வனத் துறையினருக்கு தகவல் அளித்தும், இறந்து கிடந்த மயிலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க புதன்கிழமை மாலை வரை யாரும் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஊத்துக்குளி கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் இல்லை என்று காரணம் கூறி, இறந்து போன மயிலை அகற்ற யாரும் வரவில்லை. மயில் என்ன காரணத்துக்காக உயிரிழந்தது என்பது தெரியவில்லை. தகவல் தெரிவித்தும் வனத் துறையினரின் அலட்சியப்போக்குடன் நடந்து கொள்வது கண்டிக்கதக்கது என்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் ஊத்துக்குளியில் விவசாய நிலத்தின் அருகே 9 மயில்கள் உயிரிழந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.