அவிநாசியில் பரதக் கலைஞர்கள் மண் பானை மீது பரத நாட்டியமாடி ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
மண் வளம் காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் வகையில் அவிநாசி ஸ்ரீபிருந்தாவன் கலாஷேத்ரா சார்பில் பரதக் கலைஞர்கள் மண் பானை மீது பரத நாட்டியமாடும் நிகழ்வு அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், குழந்தைகள், பெண்கள் உள்பட 321 பரத நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஒன்பது நிமிடங்கள் மண் பானை மீது நடனமாடி தங்களது கலைத் திறனை வெளிப்படுத்தினர்.
இதில், 310 கலைஞர்களின் நாட்டியம் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்ததாக ஆசிய சாதனைப் புத்தக நிர்வாகியால் அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கான சான்றிதழை ஸ்ரீபிருந்தாவன் கலாஷேச்த்ரா தாளாளர் ஸ்ரீமதி ஆண்டாளிடம் ஆசிய சாதனைப் புத்தகப் பொறுப்பாளர் விவேக் வழங்கினார்.
இதற்கு முன்னர், ஹைதராபாதில் 2009இல் 50 பேர் மண் பானை மீது பரத நாட்டியமாடியதே ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது.