திருப்பூர்

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு

DIN

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து புதன்கிழமை மாலை  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.  கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வறட்சி ஏற்பட்டது. 
இந்நிலையில் தென்மேற்குப் பருவ மழையால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்கள் கன மழை பெய்தது. இதைத் தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து அதிகபட்சமாக  11 ஆயிரம் கன அடி வரை அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 75 அடியை எட்டியது. 
இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் உள்ள நிலைப் பயிர்களான தென்னை, நெல் மற்றும் கரும்புப் பயிர்களுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று அமராவதி அணையின் பிரதான கால்வாயில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 25,250 ஏக்கர் பயன் பெறும்.
இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காகவும், கரூர் வரையிலான குடிநீர்த் தேவைகளுக்காகவும் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று அமராவதி ஆற்றில் இருந்து விநாடிக்கு 2  ஆயிரம் கன அடி தண்ணீர் புதன்கிழமை மாலை 6 மணி அளவில் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து 3 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் எனவும், அதன் பின்னர் தேவையைப் பொருத்து நீர்திறந்து விடப்படும் எனவும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணை நிலவரம்:
90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 78.31 அடி நீர் இருந்தது. அணைக்கு 1300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பிரதான கால்வாயின் மூலமாக 440 கன அடி, ஆற்றில் 2 ஆயிரம் கன அடி என மொத்தம் 2440 கன அடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT