உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைப் பகுதியில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
உடுமலை அருகே உள்ள சுற்றுலா இடமான திருமூர்த்தி அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அணைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள், துணிக் கழிவுகள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை எரிந்துச் செல்கின்றனர்.
இதனால் அணையில் உள்ள நீர் மாசுபடுவதுடன் நோய் கிருமிகளும் பரவி வருகின்றன. இந்நிலையில் உடுமலை "தாகம்' அமைப்பினர் திருமூர்த்தி அணைப் பகுதியில் கிடக்கும் கழிவுகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அமைப்பினருடன் உடுமலை வட்டார வேளாண்மை துறையினர், கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் இணைந்து அணைப் பகுதியில் சனிக்கிழமை தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறும்போது, திருமூர்த்தி அணைப் பகுதியில் இதுவரை 150 டன் கழிவுகளுக்கு மேல் அகற்றப்பட்டுள்ளன. இங்குள்ள கழிவுகளை அகற்றும் பணி தொடரும் என்றனர்.
தாகம் அமைப்பின் நிர்வாகிகள் சிந்து, வேளாண்மைத் துறை அலுவலர்கள் தா.வைரமுத்து, குமாரராஜா உள்ளிட்டோர் தூய்மைப் பணிகளை ஒருங்கிணைத்தனர்.