முகப்பு
திருப்பூர்

கொண்டைக் கடலை விளைச்சல் குறைவு: விவசாயிகள் கவலை

பல்லடம் பகுதியில் கொண்டைக் கடலை விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Updated On : 13 பிப்ரவரி 2019, 7:55 am IST
பகிர்:

பல்லடம் பகுதியில் கொண்டைக் கடலை விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
பல்லடம் வட்டாரத்தில் காய்கறி, தானியம், தென்னை உள்ளிட்ட பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பருவ கால மாற்றத்துக்கு ஏற்ப உளுந்து, துவரை, கொண்டைக் கடலை சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது. குளிர் மற்றும் பனிக் காலத்துக்கு ஏற்ற பனிக்கடலை எனப்படும் கொண்டைக் கடலை சாகுபடி  ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பயிரிடப்படுகிறது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் பயிர் நன்கு வளர்ந்து கொண்டைக் கடலை அறுவடைக்கு தயாராகும். நடப்பு ஆண்டு பிப்ரவரியில் அறுவடை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கொண்டைக் கடலை விளைச்சல் குறைந்துள்ளது. 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
அக்டோபர் மாத இறுதியில் கொண்டைக் கடலை பயிரிடப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ. 80 ஆக இருந்தது. நடப்பு ஆண்டு கிலோ ரூ. 65-க்கு விற்கப்பட்டது. மேலும், வழக்கத்தைக் காட்டிலும் கொண்டைக் கடலை விளைச்சல் குறைந்துள்ளது. வட கிழக்கு பருவமழை குறைவாக கிடைத்ததே விளைச்சல் குறைய காரணம் ஆகும்.  ஏக்கருக்கு 700 கிலோ வரை மகசூல் கிடைத்து வந்த நிலையில் தற்போது 400 கிலோவாக குறைந்துள்ளது. மேலும், வட மாநில கொண்டைக் கடலை மகசூல் அதிகரித்து அவை சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளதால் இங்குள்ள கொண்டைக் கடலை விலை குறைந்துள்ளது.  இதனால் கொண்டைக் கடலை சாகுபடி விவசாயிகள் வருவாய் குறைந்து பாதிப்படைந்துள்ளோம் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.