திருப்பூர், குமார் நகரில் சாலையில் ரூ.10 ஆயிரம் பணம், ஏடிஎம் அட்டையுடன் கிடந்த மணி பர்ஸை காவல்துறையினரிடம் வேன் ஓட்டுநர் ஒப்படைத்தார்.
திருப்பூர், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் மனோகரன் (56). இவர் அவிநாசி சாலை, குமார் நகர் சந்திப்பு அருகே திங்கள்கிழமை சென்றபோது மணி பர்ஸ் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதை மனோகரன் எடுத்துப் பார்த்தபோது அதில் ரூ.10 ஆயிரம் மற்றும் ஏடிஎம் அட்டைகள் இருந்துள்ளன. இதையடுத்து அந்த மணி பர்ஸை அங்கிருந்த போக்குவரத்துக் காவலரிடம் மனோகரன் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் விசாரித்ததில் அங்கித் சௌத்ரி (20) என்பவர் அந்த பர்ஸை தவற விட்டது தெரிந்தது. இதையடுத்து, அங்கித் சௌத்ரிக்கு தகவல் தெரிவித்த காவல் துறையினர், மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.பிரபாகரன் (தலைமையிடம்) முன்னிலையில் அவரிடம் ஒப்படைத்தனர். மேலும், வேன் ஓட்டுநர் மனோகரனின் நேர்மையை காவல் துறையினர் பாராட்டினர்.