வெள்ளக்கோவில் பகுதி சிவன் கோயில்களில் திங்கள்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வெள்ளக்கோவிலில், மூலனூர் சாலையில் உள்ள தெய்வநாயகி உடனமர் சோழீஸ்வர சுவாமி கோயில், மயில்ரங்கம் வைத்தீஸ்வரன் கோயில், உத்தமபாளையம், லக்கமநாயக்கன்பட்டி, கண்ணபுரம் ஈஸ்வரன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இக்கோயில்களில் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பட்டாடை உடுத்தி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்தக் கோயில்களைச் சேர்ந்த பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.