திருப்பூர் மாநகரில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை அரசுத் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், நிதித் துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மத்திய அரசின் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்டம், திறந்தவெளி காலியிடங்களை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைத்தல், புதிய குடிநீர்த் திட்டப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், டவுன்ஹாலில் மாநாட்டு அரங்கம் கட்டுதல், நவீன பேருந்து நிலையம், பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மத்திய அரசு சுமார் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிலையில், பொலிவுறு திட்டத்தின் கீழ் பாண்டியன் நகரில் குடிநீர்ப் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டு வரும் புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, திருப்பூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள், டவுன்ஹாலில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஒங்கிணைந்த மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணி ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், நிதித் துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், பணிகளின் தற்போதைய நிலை மற்றும் எவ்வாறு திட்டமிட்டு கட்டப்படுகிறது என்பது குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமாருடன் ஆலோசனை நடத்தினர். ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் ஜி.ரவி, மாநகர் நல அலுவலர் பூபதி, செயற்பொறியாளர் எஸ்.திருமுருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.