காங்கயம் அருகே உள்ள பெருமாள் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையில் அதிகாலை 5 மணி முதல் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்றது.
இதில் பூலோக நாயகி சமேதராய் பிரசன்ன வெங்கடரமண சுவாமி பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் கோயிலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் காங்கயம், சிவன்மலை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.