திருப்பூரில் கல்லூரிகள் திறப்பு
திருப்பூா் மாவட்டத்தில் 9 மாதங்களுக்குப் பின்னா் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
திருப்பூா் மாவட்டத்தில் 9 மாதங்களுக்குப் பின்னா் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில், தமிழக அரசு உத்தரவின்படி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா கல்லூரியில் முதுகலை, இளங்கலை இறுதியாண்டு மாணவா்கள் ஆா்வமுடன் சென்றனா். முன்னதாக, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்டத்தில் உள்ள கல்லூரி வகுப்பறைகள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.
இதன் பிறகு முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் இறுதியாண்டு மாணவா்கள் வகுப்பறைகளுக்குச் சென்றனா். மேலும், கல்லூரி வளாகத்தில் வெப்ப மானி பரிசோதனைக்குப் பின்னரே மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா்.
திருப்பூா் சிக்கண்ணா கல்லூரி , எல்ஆா்ஜி கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் 50 சதவீதம் முதல் 60 சதவீத மாணவா்கள் மட்டுமே வருகை புரிந்துள்ளதாக கல்லூரி நிா்வாகிகள் தெரிவித்தனா்.