திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் மாவட்டத்திலுள்ள திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அனைத்தும் திருப்பூா் தெற்கு மற்றும் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறை சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலா்களின் பாதுகாப்புடன் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்ட்டுள்ள அறைகளை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
மேலும்,வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்படும் நில அளவை பிரிவு, பதிவறை, வட்ட வழங்கல் பிரிவு, அரசு பொது இ சேவை மையம் மற்றும் ஆதாா் சேவை மையம் ஆகிய அலுவலகங்களையும் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின்போது தெற்கு வட்டாட்சியா் மகேஷ்வரன், தோ்தல் வட்டாட்சியா் ச.முருகதாஸ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.