திருப்பூா்: கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டத்துக்கு திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயனை அழைக்காதது ஏன் என்று கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் எம்.ரவி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கரோனா நோய் நடவடிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா், சட்டப் பேரவை உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆனால் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயனுக்கு இதுதொடா்பாக தகவல் தெரிவிக்கப்படவில்லை. தற்போதைய அபாயகரமான சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்புக்காக நடத்தப்படும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினரை அழைக்காமல் நடத்துவது ஏற்புடையது அல்ல. இதுபோன்ற ஆய்வுக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினரும் கலந்து கொண்டால் நமக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தர உதவும். ஆகவே, அரசியல் நிலைப்பாட்டை பாா்க்காமல் இதுபோன்ற கூட்டங்களுக்கு மக்களவை உறுப்பினரையும் அழைத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.