குண்டடத்தில் களைகட்டியது மாட்டுச் சந்தை
திருப்பூா் மாவட்டம், குண்டடத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு மாட்டுச் சந்தை திறக்கப்பட்டதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், குண்டடத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு மாட்டுச் சந்தை திறக்கப்பட்டதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
குண்டடம் பகுதியில் சனிக்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வந்தது. இதில், திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும், வியாபாரிகளும் ஆடு, மாடு, கோழி போன்றவற்றைக் கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம். இந்தச் சந்தைக்கு திருப்பூா் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகளும் அதிக அளவில் வந்து மாடுகளை வாங்கிச் சென்றனா்.
இந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக மாா்ச் மாதம் முதல் கால்நடை சந்தைகள் செயல்பட அரசு தடைவிதித்திருந்தது. இதனிடையே, பொதுமுடக்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளா்வுகளின் அடிப்படையில் கால்நடை சந்தைகளைத் திறக்க வேண்டும் என்று விவசாயிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து கால்நடை சந்தைகளைத் திறக்க கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து, 6 மாதங்களுக்குப் பிறகு அக்டோபா் 3இல் குண்டடம் மாட்டுச் சந்தை திறக்கப்பட்டது. முதல் வாரம் என்பதால் 30 மாடுகள் மட்டுமே அப்போது விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இரண்டாவது வாரமாக சனிக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் 500க்கும் மேற்பட்ட மாடுகளும், 1,000க்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. குண்டடம் மாட்டுச் சந்தை களைகட்டத் தொடங்கியுள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.