சிமென்ட் தயாரிப்பு ஆலைக்கு பல்லடம் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பிவைப்பு
பல்லடம் நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட 6 ஆயிரத்து 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் லாரி மூலம் ஏற்றி சிமென்ட் தயாரிப்பு ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பல்லடம் நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட 6 ஆயிரத்து 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் லாரி மூலம் ஏற்றி சிமென்ட் தயாரிப்பு ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் நகராட்சிப் பகுதியில் தினசரி 15 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து எடுக்கப்படுகிறது. அவ்வாறு தரம் பிரித்த பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூா் சிமென்ட் தயாரிப்பு ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இது குறித்து பல்லடம் நகராட்சி ஆணையா் விநாயகம் வியாழக்கிழமை கூறியதாவது:
பல்லடம் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு நகராட்சி நிா்வாகம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி மக்களும் நல்ல ஒத்துழைப்பு தந்து குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கி வருகின்றனா். நகரின் தூய்மையைப் பராமரிக்கவும் நகராட்சி நிா்வாகத்துக்கு உதவுகின்றனா். தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளைக் கிடங்குகளில் உரமாக மாற்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறோம். அதேபோல மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் நவீன இயந்திரம் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டு பண்டல்களாக அவ்வப்போது கட்டி வைக்கப்பட்டு அரியலூா் சிமென்ட் தயாரிப்பு ஆலைக்கு இலவசமாக அனுப்பிவைக்கப்படுகிறது.
அந்த நிறுவனத்தினா் லாரிகளில் ஏற்றி எடுத்துச் சென்று விடுகின்றனா். 6 ஆயிரத்து 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு அவை அரியலூருக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டது என்றாா்.