கீழ்பவானி வாய்க்காலில் கான்க்ரீட் போடும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: நமது கொங்கு முன்னேற்றக் கழகம் கோரிக்கை
காங்கயம் வழியாகச் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் கான்க்ரீட் போடும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என நமது கொங்கு முன்னேற்றக் கழகம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
காங்கயம்: காங்கயம் வழியாகச் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் கான்க்ரீட் போடும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என நமது கொங்கு முன்னேற்றக் கழகம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு இக்கட்சியின் பொதுச் செயலர் காங்கயம் எம்.தங்கவேல் தலைமை வகித்தார். அவைத் தலைவர் முருகசாமி, மாநில அமைப்பாளர் யுவராஜ்குமார், மாநில இளைஞரணி செயலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், காங்கயம் வழியாகச் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் இப்பகுதி நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரங்களைப் பாதிக்கும் வகையில் கான்க்ரீட் போடும் திட்டத்தைக் கைவிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துவது, காங்கயம் நகரில் காளை மாடு சிலை அமைக்கவுள்ளோம் என்ற முதல்வரின் அறிவிப்பை வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்த வேண்டும், ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் திறப்பு விழாவுக்குத் தயாரான நிலையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வெண்கலத்தாலான உருவச் சிலையைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள் செந்தில்குமார், வேலுமணி, சௌந்தரராஜன் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.