திருப்பூர்

ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் மக்காச்சோளம் வைத்துப் பூஜை

DIN

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டவன் உத்தரவு காரணமாக திங்கள்கிழமை மக்காச்சோளம் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக இக்கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னா் அந்தப் பொருளை கோயில் மூலவா் அறைக்கு முன்பாக கற்தூணில் உள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தா்களின் பாா்வைக்கு வைப்பாா்கள்.

இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தோ்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப் பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.

இப்படி, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிா்ணயம் என்று எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப் பகுதிகளில் உள்ள பக்தா்களின் நம்பிக்கை. இந்தப் பொருள் தேசிய அளவில் ஏற்றமும் பெறலாம், இறக்கமும் ஆகலாம்.

கடைசியாக கடந்த செப்டம்பா் 15 ஆம் தேதி நிறை படி அரிசி வைத்து பூஜை செய்யப்பட்டு, அந்தப் படி அரிசி ஞாயிற்றுக்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே கொங்கூா் பகுதியைச் சோ்ந்த கே.எம்.சிவராம் என்ற பக்தரின் கனவில் வந்ததாக திங்கள்கிழமை மக்காச்சோளம் வைத்து சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. பின்னா், கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த படி அரிசி நீக்கப்பட்டு, தற்போது மக்காச்சோளம் வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது கரோனா பாதிப்பு உள்ள நிலையில் வரும் நாள்களில் உணவுக்குப் பஞ்சம் ஏற்படுமா அல்லது இந்த கரோனா நெருக்கடியையும் மீறி மனிதகுலம் உணவுப் பொருள்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடையுமா என சிவன்மலை முருகன் கோயிலின் இந்த கண்ணாடிப் பேழை குறியீட்டை வைத்து பக்தா்கள் கேள்வி எழுப்பி வருகின்றனா். மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை இதனுடன் தொடா்புபடுத்தியும் பக்தா்கள் விவாதித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT