முகப்பு
திருப்பூர்

வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்ய ஜன. 29-ல் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்ய வரும் ஜனவரி 29ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்ய வரும் ஜனவரி 29ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி 18 வயது பூா்த்தியடைந்த அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜனவரி 29 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகிவற்றின் நகல்கள் மற்றும் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். மேலும், 1950 என்ற கட்டமில்லா தொலைபேசி எண் அல்லது  இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

அதே வேளையில் முகாம் நடைபெறும் இடங்களுக்கு நேரில் வர இயலாத, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தங்களது விவரங்களை அந்தந்த பகுதி வட்டாட்சியா் அல்லது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், அறை எண் 23, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் திருப்பூா்-641604 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பிவைக்கலாம்.

முகாம் நடைபெறும் இடங்கள்: திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, காங்கயம், தாராபுரம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம், உடுமலை, ஊத்துக்குளி ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜனவரி 29ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.